Tuesday, February 9, 2010

குட்டிநாயும்..!! கொஞ்சம் உண்மைகளும்..!!

“குட்டிநாய்க்கும் குழந்தைப்பிளைக்கும் இடம் கொடுக்காதே” இதுதான் எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே ஒரு  பழமொழி. எங்கள் மூதாதையர்கள் ஏன் இப்படி எழுதி வைத்தார்கள் என்பதுதான் புரியவில்லை சரி அப்படி இடம் கொடுத்தால் என்ன தான் ஆகும் மடமா போய்விடும்.? இல்லையே.! கொஞ்சம் உங்கள் ஆடைகள் அலங்கோலப்படும், புள்ளை சீச்சா அடிச்சா குளிக்கவேண்டி வரும், ஏதாவது ஒண்ணு ரெண்டு சாமான் உருளும், உடையும்..!! இவற்றை எல்லாம் சரிபண்ணி விடலாம் ஆனால் இரண்டினாலும் கிடைக்கும் நிம்மதி சந்தோசம் எல்லாவற்றையும் நீங்கள் என்ன விலை கொடுத்தும் வெளியில் பெறமுடியாது .

 

சின்னஞ்சிறு குழந்தைகளின் மழலைப்பேச்சு, பிராணிகளின் விளையாட்டு, குட்டிக்கோபம், செல்லக்கடி இவற்றில் மனம் இளகாதவர்கள் மனிதராக இருக்க முடியாது. போகும் இடத்தில் வாங்கும் கடுப்பை எல்லாம் வீட்டில் கொண்டுவந்து காட்டும் எங்கள் கனவான் கூட்டதிற்கு ஒரு செல்லப்பிராணி வீட்டில் இருந்தால் மனுசன் வாங்கின கடுப்பை வாசலிலேயே விட்டுட்டு வரும்.நாங்கள் போடுகின்ற மூன்று நேர சாப்பாட்டுக்கும் படுக்க ஒரு இடத்திறகும் அவை காட்டும் அன்பு வேறு எங்கும் கிடையாது. நாய்கள் ஒரு போதும் கடமைக்கு வாலாட்டுவதில்லை எங்களைப்போல..!!

 

நாய் பூனை ஆடு மாடு தொடங்கி அத்தனை பிராணிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்..!!விசேடமாக நான் பாரத்து ரசிக்கும் ஒருவர் எங்கள் வீட்டு வேப்பமர அணில் பிள்ளை.!! துள்ளித்திரியும் இந்த அணிலாரின் சுறுசுறுப்பு எனக்கு இருந்தால் எப்படி இருக்கும் என நான் எண்ணிப்பார்ப்பது உண்டு.அணில்பிள்ளை சாப்பிடும்போது கூட வாலை சும்மா வைத்திருக்காது அங்கே இங்கே ஆட்டிக்கொண்டே சாப்பிடும் அவதானித்து பாருங்களேன். நான் எங்கு சென்றாலும் எந்த அறிமுகமில்லாத பிராணியையும் தொட்டுத்தடவ தவறுவதில்லை.இதில் நாய்கள் பழக கொஞ்சம் காலம் எடுக்கும் என்றாலும் அனேகமாக எனது நணபர்களின் வீட்டு நாய்கள் எல்லாம் சிறிது காலத்தில் என் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிடுவார்கள்.

 

boy-dog-prayingசெல்லப்பிராணிகள் விளையாட்டுக்கு மட்டும் அல்ல உடல் உள ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக உள்ளன.வயோதிப காலத்தில் முதியவர்களை சோர்ந்து விடாமல் வைத்திருக்க  உதவும் இவை அவர்கள் தனிமையாக உணர்வதையும் தடுத்து அவர்களின் வாழ்க்கையில் இறுதிவரை ஒரு பிடிப்பை ஏறபடுத்துகின்றன. வெளிநாட்டில் இருக்கும் புள்ளைகளை விட ஆடுமாடுகள் இவர்களில் வைத்திருக்கும் அன்பு அதிகம் .

 

உடல் எடை குறைப்பதற்கு ஏன் ஜிம்முக்கு போகவேண்டும் மாலை ஒரு மணி நேரம் ஒதுக்கி நாயோடு ஒடி விளையாடியும் கொஞ்ச தூரம் நடந்தும் கூட ஐந்து சதம் செலவளிக்காமல் உடல் எடை குறைக்கலாம்.இதைவிட செல்லப்பிராணிகள் மன அழத்தத்தை குறைப்பதுடன் உயர் குருதி அழுத்த நோயாளிகளுக்கு குருதி அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது அன்பாக ஒரு பிராணியை வளர்ப்பது உயர் குரதி அமுகத்திறகு மாத்திரையை விட சிறந்த வைத்தியம் என்று கூறப்படுகிறது.இதன்மூலம் தன்னை வளர்பவரின் நீண்ட ஆயுளுக்கு இவை உறுதுணையாக இருப்பது ஆரய்ச்சிகள் மூலம் நிருபணமாகியுள்ளது இருதய நோயால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 92பேரில் மேற்கொள்ளப்பட ஆய்வு ஒன்றில் செல்லப்பிராணிகள் எதுவும் வளர்த்திராத 29 பேர்ல் 11 பேர் ஒருவருடத்திலேயே இறந்து போக செல்லப்பிராணிகள் வளர்த்த 52 பேரில் மூன்று பேர்தான் இறந்திருந்தார்கள்.அத்துடன் ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பது மார்படைப்பு வருவதற்கான ஆபத்தை இரண்டு சதவீதத்தால் குறைப்பதாக இன்னொரு ஆராய்ச்சியில் சொல்கிறார்கள்.

 

இப்படி எத்தனையோ அனுகூலங்கள் இருந்தாலும் வெறும் காவலுக்கு மட்டும் நாயும் எலிபுடிக்க மட்டும் பூனையும் வளர்க்கும் கூட்டமும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. மேலை நாடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கசெலாவாகும் தொகையில் ஒரு குடும்பம் நடத்தலாம் என்று கூறுவார்கள் அங்கு இவற்றுக்கு இருக்கும் மரியாதை அந்தளவு..!!! எங்களூரில்…????

 

cute-dog-yawning11233800905 இவற்றால் வரும் வில்லங்கங்கள் என்று பார்த்தால் ஒன்று,நாய் பூனை போன்றவற்றின் மயிர்களுக்கு சில பேருக்கு ஒவ்வாமை இருக்கும் இது ஆஸ்த்துமாவை கூட அவர்களுக்கு ஏற்படுத்தும். இதைவிட  ஒழுங்கற்ற கவனிப்பால்  இவற்றின் (rabiesvirus) வைரஸ் தொற்றுக்குள்ளான உமிழ் நீர் மூலம் பரவும் விசர்நாய்க்கடி என்று சொல்லப்படும் நீர் வெறுப்பு(rabies)நோய், மற்றும் இவற்றில் வளரும் உண்ணிகளின் மூலம் பரவும் தைபஸ் என்ற ஒரு வகை காய்ச்சல் எனபன ஏனைய முக்கியமான சுகாதார பிரச்சனைகள்.ஆனால் இவை இரண்டும் உங்கள் பிராணிகளை சுகாதாரமாக தடுப்பு மருந்து ஏற்றி வளர்த்தால் ஒரு பிரச்சனையே இல்லை.!!(இலங்கையில் தான் இது மிகவும் அதிகம் )உங்களை சந்தோசமாக மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமா வாழ வகை செய்யும் இந்த பிராணிகளை ஆரோக்கியமாக வளர்ப்பது உங்கள் கடமை இல்லையா.!! 

 

 

 

.

Monday, February 8, 2010

என் தேவை!!!

  self-esteem

கோடையில் எத்தனை தடவை,

கொல்லப்பட்டாலும்..

மாரியில் துளிர் விடும்..!

கோரைப்புற்கள்..!!

 

பிஞ்சு வயதில்..

கால் பிரண்டு விழுந்தாலும்..

அழாமல் எழ முயலும்..

பிள்ளை மனது..!!

 

முறித்து நீ.!

எங்கோ தூக்கி எறிந்தாலும்..

ஒட்டியிருக்கும் மண்ணில்..

உயிர் கொள்ளும் கதியால்..!!

 

ஒரு வினாடி ஓய்வின்றி.

கண்டம் விட்டு கண்டம்…

கடலும் கடந்து வரும்…

இரு சிறகு கொண்ட பறவை..!!

 

மார்கழி மழை மப்பு..

இடைவிடாமல் தூறும் மேகம் – விலக்கி

எட்டிப்பார்க்கும்…

சிறு வெயில் கீற்று..!!

 

இத்தனையும் ஒட்டுமொத்தமாய்..கொண்ட

ஒன்று  மட்டும்…தேவை..

உன் முயற்சி திரி கொளுத்தி….

வாழ்வில் ஒளியேற்றும்..

!!!நம்பிக்கை!!!

ஆழமறியா சமுத்திரத்தில்…

உன்னை அம்மணமாய் போட்டாலும்…

கை..கால் அடிக்காமல்…

கடலுக்குள் மூழ்காதே..

சிலவேளை கடலும் உறைந்துவிட…

நீ ஏறி நடந்து வரலாம்!!!

 

 

.

Thursday, February 4, 2010

நானும் சாமிதான்..!!!

அரசடி வீதியால் அவசர அவசரமாக எனது பைக்கில் வந்து கொண்டிருந்தேன்!! வழமைக்குமாறாக வண்டியின் வேகமுள்ளு 60km/h வேகத்தை தொட்டுக்கொண்டிருந்தது. எனது நண்பன் ஒருவன் வீட்டு வாசலில் வந்து நின்று அழைப்பை எடுத்திருந்தான் “மச்சான் எங்க நிற்கிறாய் வீட்ட வரச்சொல்லிப்போட்டு …….” இதுதான் காரணம், சின்ன அலுவலாக இவன் எங்க இப்ப வரப்போறான்!! என நினைத்துத்தான் வெளிக்கிட்டேன் ஆனால் வந்துட்டான்..!! வந்தே விட்டான்..!! வேகத்தை குறைத்தேன் சிறிய வளைவு ஒன்று கவனிக்காமல் விட்டால், எனக்கு ஆசுப்பத்திரியிலோ காவல் நிலையத்திலோ அனுமதிப்பத்திரம் நிரப்ப வைச்சிடுவாங்கள்…!! என்று எண்ணிய எண்ணம் மறைவதற்குள்.. ஒரு உருவம் வீதியின் அடுத்த முனையிலிருந்து நடுவீதியை நோக்கி வரமுறபட்டது .. சட்டென கிளச்சை பிடித்து மேலும் வேகத்தை குறைத்து அந்த உருவத்தை கவனித்தேன் அதன் செய்கைகள் எனக்கு மேலும் அதிரச்சியளித்தது.!!

 

அவர் ஒரு நடுத்தர வயது மனிதர் சீராக ஆடை அணிந்திருந்தார்.. முழுக்கை சட்டை, நீள்காற்சட்டை, நான்றாக வாரப்பட்ட தலைமுடி, பாரக்க நல்ல தோற்றம்!! வீதிக்கு குறுக்கே வந்து என்னை மறிப்பதற்காக கையை காட்டிய அந்த மனிதர், பின்னர் ஒரு கும்பிடு போட்டார்!! எனக்கு அதிரச்சியும்!! குழப்பமும்!! என்ன செய்வதென்று புரியும் முனபாக, மீண்டும் அதே கும்பிடு!! வண்டியை நிறுத்தி கவனித்தேன். இந்த முறை எனக்கு குழப்பம் கலைந்தது. அவர் ஒரு பேச்சுப்புலன் செவிப்புலன் அற்றவர் நல்லூர் இருக்கும் திசையை காட்டி, தன்னை ஏற்றி சென்று விடும்படி கேட்கிறார்.. போல.. எல்லாம் புரிவதற்குள் மனிதர் இன்னும் பல கும்பிடுகள் போட்டிருந்தார். கோவில் என்பதைத்தான் அவர் கும்பிட்டு காட்டி இருக்க வேண்டும்.

 

ஆனால் நானோ அந்த வழியால் செல்ல வேண்டி இருக்கவில்லை. அவருக்கு விளங்கப்படுத்த எனக்கு சைகை மொழியுந்தெரியாது, வீட்டு வாசலில் நிறகும் நண்பனின் புண்ணியத்தில் என் தொலைபேசி வேறு தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. ஆனாலும் இறுதியில் எனக்கு அவரின் வேண்டுகோளை புறக்கணிக்க மனம் வரவில்லை ஏற்றிச்சென்று நல்லூர் கோவில் முன்பாக இறக்கி விட்டேன். அப்படியே கோபுரத்தை பார்த்து முருகனுக்கும் ஒரு விண்ணப்பம் போட்டேன் “நல்லூர்க்கந்தா நான்தான் உன் வாசல் பக்கமே தலை வச்சு படுக்கிறதில்ல ஆனா உன் பக்தன் ஒருவனை உன் பாதார விந்தங்களில் கொண்டு வந்து விடுகிறேன் அவனுக்கு அளிக்கும் அருளில் மிச்சம் மீதி இருந்தால் எனக்கும் அனுப்பி வைப்பா கனக்க தூரமில்ல பக்கத்தில் தான் இருக்கிறன்” விண்ணப்பத்தை அனுப்பி வைத்துவிட்டு பின்னாலிருந்து இறங்கியவரை திரும்பிப்பாரத்தால், இறங்கிய மனிதர் தலையை ஆட்டி இன்னும் ஒரு கும்பிடு போட்டார் பாருங்கள். இது நடந்து ஒரு வாரமாகிறது இன்னும் மனிதர் என கண்ணுக்குள் தெரிகிறார்.

 

பல சமயங்களில் பிச்சைக்காரர்கள் காசு போடும்போது கும்பிடுவார்கள் அந்த சமயங்களில் இப்படி மனதுக்கு ஒரு விதமாக உணர்ந்ததில்லை ஆனால் இப்போது இப்படி பாரக்க நன்றாக இருந்த ஒருவர், அதுவும் பேசும் புலன் அற்றவர் ,என்னைப்பார்த்து கும்பிட்டது மனதுக்குள் ஏதோ செய்தது.

 

இப்ப சொல்லுங்க நீங்க எத்தனை தடவை அப்பு சாமி ஆண்டவா பிள்ளையாரப்பா அம்மாளாச்சி தாயே என்று விழுந்து விழுந்து கும்பிட்டிருப்பீரகள்!! எத்தனை தடவை நீங்கள் வேண்டியதை அண்டவன் அளித்திருக்கிறார்.??? ஆனால் நான் ஒரு சில கும்பிடுகள் ஒருவர் போட்டதற்கே அருள் பாலித்து இருக்கிறேன் இல்லையா..!!! இனி நீங்களும் ஏதும் பிக்கல் புடுங்கல் என்றால் என் பிளாக்கு பக்கம் வந்து ஐஞ்சாறு கும்பிடு போடுங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு அருள் புரிவான் இந்த பாலவாசகன்!!!

பிறகுறிப்பு- நல்லூர் கந்தனுக்கு நான் போட்ட விண்ணப்பத்திறகு இன்னும் பதில வரவில்லை!! பாருங்கள்!!

Friday, January 29, 2010

கடமை தவறும் யாழ் ஊடகங்கள்….

ஒரு சமூகத்தை சரியான வழியில் செலுத்துவதற்கு அல்லது ஒரு முக்கியமான காலகட்டத்தில் முடிவுகளை எடுப்பதற்கு மக்களை வழிநடத்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

 uthayan

யாழ்ப்பாண ஊடகங்கள் அந்த வேலையை இன்றுவரை கண்ணும் கருத்துமாக செய்துவருகின்றன என்றுதான் சொல்லவேண்டும்.  அதறகு ஒன்று அல்ல எத்தனை  “சபாஷ்” வேண்டுமென்றாலும் போடலாம். எத்தனையோ ஆபத்துக்கள் மத்தியிலும், மருந்துக்கு கூட பத்திரிகை அச்சிட பேப்பர் கிடைக்காத காலத்திலும், பல உயிர்களை கொடுத்தும் கூட விலை போகாமல் சொல்ல வேண்டியதை சொல்ல தவறாத இந்த  ஊடகங்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவை. அவற்றை விமர்சனம் செய்வது எனபது எனது நோக்கமல்ல என்றாலும், அரசியல் என்ற வட்டதிற்கு அப்பால் பல விடயங்களில் சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தவும், வளர்ந்து வரும் நவீன உலகத்தின் போக்குகளை, படைப்புகளை,  உலகத்திலிருந்து முற்றுமுழுதாக தனிமைப்படுத்தி இருந்த யாழ்மக்களிற்கு காட்டவும் இந்த ஊடகங்கள் என்ன செய்திருக்கின்றன என்பது ஒரு தவிர்க்கமுடியாத கேள்வி.

 

இதுதான் ஆரம்பத்தில் படித்தவன் தொடங்கி பாமரன் வரை படுக்கையிலிருந்து எழும்பியவுடன் பச்சைத்தண்ணீர் கூட குட்டிக்காம பேப்பர் வேண்டி பாத்துக்கொண்டே தேத்தண்ணி குடித்த நிலை மாறி,இப்பொழுது வெறுமனே இந்த அழுக்கு அரசியலுக்கும் ஆங்காங்கே நடக்கும் விழாக்கள்,  வில்லங்கங்கள் செயதிகளுக்கும், அதிகமாக மரண அறிவித்தல் நினைவஞ்சலிகளுக்குந்தான் பேப்பர் … என்று கடமைக்கு பேப்பர் வேண்டும் நிலை  ஏற்பட்டிருக்கிறது.ஒரு பத்திரிகையை செத்தவீட்டுபேப்பர் என்று மக்கள் அழைக்கும் அளவுக்கு…... இருக்கிறது இன்றைய யாழ் ஊடகங்களின் நிலைமை..!!!

 

யுத்தம் நடந்த காலத்தை விட இப்போதுதான் யாழ்ப்பாண ஊடகங்களுக்கு பொறுப்புக்ககள் அதிகம்… காரணம் திறந்துவிடப்பட்டிருகும் பாதை.வெறும் நிலத்தில் போட்டு விறபனை செய்யப்படும் சோளன் தொடங்கி.. தெற்கிலே ஒடுக்கப்பட்டிருக்கும் போதைமருந்து,  விபச்சாரம், (இப்போதே சமுத்திரத்தில் தெரியும் பனிக்கட்டியாக ஒரு சில கதைகள்  வெளியில் வந்திருக்கிறது) இன்னும் எத்தனையோ சமூகப்பிரச்சனைகள்  அத்தனைக்கும் புதிய சந்தையாக யாழ்ப்பாணம், (வாகன நெரிசல் அதிகரித்து வரும் வீதிவிபத்துக்கள்… ) யாரும் ஆரம்பத்திலே கண்டு கொளவதில்லை எல்லாம் முற்றி முறிக்கமுடியாத அளவுக்கு பெருத்த பிறகுதான் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவார்கள். இதை எல்லாம கண்டு கொள்ளாத அரசாங்க அதிகாரிகளின் முதுகில் தட்டி.. முகத்தில் அறைந்து… சொல்லவேண்டிய ஊடகங்கள் அமைதியாக இருப்பதுதான் பெரும் ஆச்சரியம்.

 

சரி..!!!அதுதான் போகட்டும்.!!! மரணஅறிவித்தல்.. விளம்பரங்கள்.. என்று உழைக்கிற பணத்தில் இன்னும் இரண்டு அதிகமாக பக்கங்களை போட்டு கொஞ்சம் உலக நடப்புகள் ஏதாவது நல்ல ஆய்வுக்கட்டுரைகள் (அரசியல் அல்ல) புத்தம புதிய கண்டுபிடிப்புகள்(உதாரணமாக அண்மையில் பிரபலமான sixth sense இதை நான் பிளாக்குகளில் பாரத்து எனது நண்பர்களுக்கு சொல்லித்தான் அவர்களுக்கே தெரியும்) எத்தனை விடயங்கள் புதிதாக இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது.அதை கொஞ்சமாவது பொறுக்கி போட்டால் இணையத்துடன் தொடர்பில்லாதவர்களுக்கு,(யாழ்ப்பணத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கணினி என்றால் ஒவ்வாமை)   பள்ளி செல்லும் பிஞ்சுகள் பலருக்கு  பயனுள்ளதாக இருக்காதா..??

 

யாழ்ப்பாண பத்திரிகைகளே…!! ஏன்..?..ஏன்..? ஏன் முடியவில்லை..?? உங்களால்..!!!

 

‘எப்படியோ விக்கிற பேப்பர் தானே ஏன் இந்த எடுபுடி வேலை எல்லாம்’ என்று நினைக்கிறார்களா..? இல்லை யுத்தம் என்ற குளிருக்குள் போர்த்தி படுத்திருந்தவர்கள் இன்னும் போர்வை விலக்கி வெளியில் வரவில்லையா..? முதல் சொன்னது தான் சரி போல தெரிகிறது எதுவும் வியாபாரந்தானே.!!! எதை எழுதினாலும் இத்தனை பேப்பர்தான் விற்பனை என்றால் ஏன் புதிதாக எழுதப்போகிறார்கள்.!!!

 

ஒரு உண்மையான ஊடகம் எது…..?? என்றால்

நான் சொல்வதைத்தான் மக்கள் படிக்கவேண்டும் என்றல்லாமல் மக்களுக்கு எது தேவையோ அதை சொல்லவேண்டும்..!!!

ShareThis

Related Posts with Thumbnails